இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு என பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் முதல் கட்ட நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 5,060 கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஒரு குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.