ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்ற பகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும், தள்ளிவைக்கப்பட்டுள்ள ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன் நேற்று (20.01.2020) மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சேலம் உள்ளிட்ட ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மறைமுகத் தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறுவது பொய் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலின் போது அதிமுக பிரமுகர் டி.எஸ்.பி. வெங்கடேசனை அரிவாளால் தாக்கினார் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
இதனையடுத்து, தேர்தலின்போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் யாருடைய கட்டுபாட்டில் உள்ளன? கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்குமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சிசிடிவி பதிவுகள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடத்த வாய்ப்புள்ளதா என விளக்கம் பெற வேண்டும் எனவும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.