விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கோழி, ஆடு, மாடு வளர்ப்பின் மூலம் தமிழகம் கிராம பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பில் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக கால்நடைப்பூங்கா அமைக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம், முன்னேற்றத்திற்காக கால்நடை வளர்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கால்நடைப்பூங்காவை பார்த்த பின் தமிழகத்திலும் இதுபோல் அமைக்க எண்ணினேன். பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஏழு மாவட்டங்களில் உணவு பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது.
நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் எவ்வளவு அவதூறு செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.