ADVERTISEMENT

சேலம் கோயிலில் உண்டியலை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை!

06:55 PM Sep 16, 2018 | elayaraja

சேலத்தில் பிரசித்தி பெற்ற குகை மாரியம்மன் கோயிலில், முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT


சேலம் குகை பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவையொட்டி இந்த கோயில் சார்பில் நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் 8ம் தேதி ஆடி பண்டிகை தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். இதனால் பக்தர்கள் வேண்டிக்கொண்டு, கோயில் உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தினர். கோயில் உண்டியலும் நிறைந்து இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் உண்டியல் வரும் 24ம் தேதி திறந்து, காணிக்கைகளை எண்ணும் பணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்கு மேல் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முன்பக்கம் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த பணம், நகை உள்ளிட்ட பொருள்களை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

இன்று காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைந்து கிடப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் சுவர் ஏறிகுதித்து கோயிலுக்குள் புகுந்து இருப்பதும், உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகள் நள்ளிரவு 2 மணியளவில் பதிவாகி இருந்தன.

வரும் 24ம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட உள்ளது. இதையறிந்துதான் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருக்க வேண்டும். அம்மனுக்கு செலுத்திய காணிக்கைகளை மீட்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இதில் ஈடுபட்டது பழைய கொள்ளையர்களா? புதிய ஆள்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT