ADVERTISEMENT

அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பரிந்துரை! 

03:38 PM Jan 10, 2024 | tarivazhagan

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தப் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.

ADVERTISEMENT

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021ம் ஆண்டு அமைந்ததை அடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர், தனது தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். பிறகு பல முக்கியமான கிரிமினில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், மாநில அரசு, சி.பி.ஐ., ரயில்வே சார்பாக பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி வாதாடினார். தி.மு.க. ஆட்சிக் காலமான 1996 முதல் 2001 வரை தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டிருந்தார்.

தற்போது 2021ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைக் கையாண்டார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனது தனிப்பட்ட காரியங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகத் தமிழ்நாடு ஆளுநருக்கு அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT