பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்களும், அமமுகவுக்கு இரண்டு இடங்களும், தமமுகவுக்கு ஒரு இடமும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும், இமகமுவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமகவிற்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாமக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்கும் தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் நீடிப்பதால் ஜி.கே. வாசன் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை பாஜக ஒதுக்க மறுத்துவிட்டதால் ஓபிஎஸ் தரப்பும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜகவில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது திருச்சி சூர்யாவின் கருத்தும் அதற்குப் பதிலளித்த பாஜக நிர்வாகியின் கருத்தும். பாஜகவின் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' எனப் பதிவிட்டு இருந்தார்.