Skip to main content

எம்.பி.க்களை இழக்க போகும் அதிமுக... பாமகவிற்கு விட்டு கொடுத்த எடப்பாடி... பாஜகவின் நெருக்கடியால் சிக்கலில் அதிமுக!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

ஊரக உள்ளாட்சிக்கான தலைவர்- துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் முடிவதற்குள் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பாகி விட்டன கழகங்கள்.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் அ.தி. மு.க.வை சேர்ந்த விஜிலாசத்யானந்த், சசிகலாபுஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, சி.பி.எம். கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் தேதியை மார்ச் இறுதி வாரத்தில் அறிவிக்க முடிவு செய்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

 

rajyasabha



தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. 124, தி.மு.க. 100, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேட்சை (தினகரன்) 1, சபாநாயகர் 1 என 234 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் இருக்கின்றனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இடங்களில் கட்சிகளின் வலிமையைப் பொறுத்து அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தலா 3 இடங்களை கைப்பற்ற முடியும் என்பதால் இரு கட்சிகளிலும் போட்டி அதிகரித்துள்ளது.

"ஒரு எம்.பி.யை வெற்றிபெற வைக்க 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. அந்த வகையில் 3 எம்.பி.க்களுக்கும் 102 எம்.எல்.ஏ.க்கள் போக, அ.தி.மு.க.வில் கூடுதலாக 22 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதேபோல, தி.மு.க.விடம் 100 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க 102 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்கிற நிலையில் 2 எம்.எல்.ஏ.க்கள் மேலும் தேவை. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசிடம் 7 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக்கிடம் 1 எம்.எல்.ஏ.வும் இருப்பதால் 3 எம்.பி.க்களை எளிதாக ஜெயித்துவிட முடியும். அதனால் போட்டியின்றித் தேர்வாகி விடலாம்'' என்கின்றனர் சட்டமன்ற செயலக அதிகாரிகள்.

 

admk



நான்கு எம்.பி.க்களை இழக்கும் அ.தி.மு.க., தற்போது 3 எம்.பி.க்களை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க முடியும். பதவிக் காலம் முடியும் விஜிலாசத்யானந்த், தற்போது ராஜ்யசபாவின் அ.தி.மு.க. கொறடாவாக இருக்கிறார். அதனால் மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடியிடம் கேட்டுள்ளார்.


கடந்த வருடம் ஜூலையில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போதும் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களை வெற்றிபெற வைக்க முடியும். அப்போது பா.ம.க. அன்புமணிக்காக ஒரு இடத்தை விட்டுக்கொடுத்த எடப்பாடி, மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த முகமது ஜான், கடந்த ஜூலையில் ராஜ்யசபா தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என முடிவு செய்த போது அதனை தமிழ்மகன் உசேனுக்கு வழங்கலாம் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்புத் தருவதாக தமிழ்மகன் உசேனிடம் சொல்லிவிட்டு, முகமதுஜானை தேர்வு செய்தார் எடப்பாடி. அதனால் தமிழ்மகன் உசேனும் இந்த முறை சீரியசாக இருக்கிறார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனு சாமியும் கடந்த முறையே எதிர் பார்ப்பில் இருந்தார். எடப்பாடியோ, ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், லோக்சபா தேர்தலில் அவரை நிற்க வைத்தார். அதில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமியும் தற்போது ராஜ்யசபா சீட்டை குறி வைத்திருக்கிறார். இந்த நிலையில், பதவிக் காலம் முடியும் சசிகலா புஷ்பா, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள்ளிருந்தும் நாடார் அமைப்புகள் மூலமும் எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், எடப்பாடிக்காக டெல்லியில் பல்வேறு அரசியல்களில் ஈடுபட்டு வரும் அவரது நண்பரான சேலம் இளங்கோவனும், மூத்த அமைச்சர்கள் 4 பேர், தங்களது ஆதரவாளர்களுக்காகவும் ராஜ்யசபாவை குறி வைத்துள்ளனர். இதற்கிடையே, 1 இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. தலைமை அழுத்தம் தந்து வருகிறது. பிரணாப் முகர்ஜி சப்போர்ட்டில் பா.ஜ.க. மேலிடத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ஜி.கே.வாசனுக்காகவும் எடப்பாடியிடம் டெல்லி வலியுறுத்துகிறது. அதனால் ராஜ்யசபா சீட்டில் இடியாப்பச் சிக்கலை எதிர்கொள்கிறார் எடப்பாடி' என்று விவரிக்கின்றனர்.


தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, "மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கு கடந்த முறையே வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. அதனால் இந்த முறை அவருக்கு கிடைக்கும். அதேபோல, கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சியான ம.ம.க., லோக்சபா தேர்தலில் வாய்ப்புத் தரப்படாததை சுட்டிக்காட்டி, ராஜ்யசபா சீட் கேட்கும் என நினைக்கிறார் ஸ்டாலின். அதேபோல, கூட்டணியிலுள்ள காங்கிரசும், சி.பி.எம்.மும் ஒரு சீட் கேட்டு அறிவாலயத்தை அணுகும். இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின், இந்த முறை 3 இடங்களையும் தி.மு.க.வுக்கே ஒதுக்க திட்ட மிட்டிருக்கிறார். கடந்த முறை கிறிஸ்தவருக்கு தந்ததால் இந்த முறை தி.மு.க.விலிருந்து நேரடியாக ஒரு முஸ்லிம் பிரமுகரை அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்கிறார்கள் சீனியர் மா.செ.க்கள்.

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்