ADVERTISEMENT

"கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்காது"- டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி!

12:03 AM Feb 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, "தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர் மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆறு உட்பிரிவுகளைச் சேர்ந்த வகுப்பினரை 'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பட்டியல் பிரிவில் இடம் பெற்றதால் சமூக ஒடுக்கல்களுக்கு ஆளாகினோம்..

புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை என்பது பெயர் மாற்றம் மட்டுமல்ல; பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும்தான். ஆனால், மத்திய அரசு பெயர் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளது. பெயர் மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியல் பிரிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள். தமிழக அரசு வெறும் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. பெயர் மாற்றத்தை, நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை இடிந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போன்ற நடவடிக்கை. பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்பது எங்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை, பட்டியல் பிரிவில் இருந்து எங்களை நீக்கவில்லை எனில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் என்று தான் அர்த்தம்.

பட்டியல் பிரிவு வெளியேற்றம் அறிவிப்பு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும். பட்டியல் பிரிவில் இருப்பதால் அரசுப் பணி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் வெளியேறவில்லை; மாறாக சுயமரியாதைக்காகத் தான் வெளியேறுகிறோம். எந்த அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட அனுசரணையாக நான் இருக்க மாட்டேன். ஒத்த கருத்து இருக்கக் கூடிய கட்சியோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் நாங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தோம். பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றவில்லை எனில் தேர்தலில் பிரதிபலிக்கும். திராவிடக் கட்சிகள் சமத்துவத்தை விரும்பவில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

சமுதாய மாற்றம் சமூக உயர்வு குறித்து கண்டுகொள்ளவில்லை; எல்லாம் வாக்குகளாகத் தான் திராவிடக் கட்சிகள் பார்க்கிறது. வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி கோவை வரும் பிரதமரைச் சந்தித்து, எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றம் குறித்து கோரிக்கை விடுப்பேன். பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் பா.ஜ.க. கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கிடைக்காது. மத்திய அரசின் பெயர் மாற்றம் அறிவிப்பு என்பதே தினசரிகளில் பாராட்டு விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும். குடியுரிமைச் சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசு எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT