ஆட்டோ டிரைவர் போதையால் வந்த வினையால் ஏற்பட்ட விபரீதத்தால் சோக நிலை ஏற்பட்டிருக்கிறது.
போடி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜபிரபு, மனோகரன் மகன் சூரியா, தயாளன் மகன் லட்சுமணன், செல்வராஜ் மகன் தினேஷ் குமார், முருகன் மகன் சரவணன், ராஜேந்திரன் மகன் சித்ரகுமார் ஆகியோர் 25 வயது மதிக்கத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் ஆட்டோ டிரைவர்களாவார்கள். உள்ளூரில் நண்பன் வீட்டு வசந்த விழாவில் கலந்து கொண்டனர். அங்கேயே வயிறு முட்ட மது குடித்து விட்டு 6 பேர்களும் இரவு சினிமா பார்க்க போடிக்கு வந்தனர்.
புதிய படம் என்பதால் தியேட்டரில் ஹவுஸ்புல் என்றதால் கொஞ்ச நேரம் அப்பகுதியில் திரிந்துவிட்டு மறுபடியும் அப்படியே ஒரே ஆட்டோவில் கோடாங்கி கிளம்பினார்.
போடி சாலை காளியம்மன் கோயில் தாண்டி எதிரே போடி நோக்கி அரசு பஸ்வருவதை கண்டும் தடுப்புகளை வேகமாக கடந்த போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ராஜபிரபும், சூரியாவும் சக்கரத்தில் சிக்கி பலியானார்கள், மற்ற நான்கு பேர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் உயிருக்கு போராடிய நான்கு பேர்களையும் தேனி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் பலியான 2 பேரையும் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆட்டோ டிரைவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ஆட்டோவில் வேகமாக சென்றதால் இப்படி ஒரு விபத்து நடந்து இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.