ADVERTISEMENT

மீன் பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்படுகிறதா?  கடலில் சென்று ஆய்வுசெய்த கலெக்டர்! 

02:37 PM Jul 22, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலின் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி 5 நாட்டிக்கல் பகுதிக்குள் விசைப்படகை மீன்பிடிக்க பயன்படுத்துவது, இழுவலையின் மடிப்பகுதியில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட இழுவலைகளைப் பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் விதமாக மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு, இயந்திரமயமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரை திறன் ஆகியன குறித்து ஆய்வுசெய்து விதிமுறை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.பி, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர்கள் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு வந்து புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே கடலூரில் சுருக்குமடி வலை பிரச்சனை மற்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி இழுவலை தடை உள்ளிட்ட பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுடன் கடலூர் மீன்பிடி துறைமுகம் சென்று அங்கு சுருக்குமடி வலை பயன்படுத்தப்படுகிறதா? இழுவை விசைப்படகு இயந்திரத்தின் அடிப்பகுதி கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத் திறன் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் படகில் கடலுக்குச் சென்றார். கடலில் 5 நாட்டிக்கல் மைல் அளவுக்குப் பயணம் செய்த அதிகாரிகள், கடலில் மீன்பிடி படகுகளில் விதிமுறைகள் மீறப்படுகிறதா என ஆய்வுசெய்தனர்.

மேலும், பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள், மிக தாழ்வான பகுதிகள், வடிகால்கள் மூலமாக மழைநீர் கடலுக்குச் செல்லும் பகுதிகளையும் ஆய்வுசெய்தனர். பரங்கிப்பேட்டை முடசல் ஓடை வரையில் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியருடன் கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்சித்சிங் (வருவாய்), பவன்குமார்ஜி (வளர்ச்சி) கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன், வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT