ADVERTISEMENT

தள்ளாத போதை, தடுமாறிய நட்பு... ஓடும் காரில் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்...

05:37 PM Nov 24, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே இன்று அதிகாலை மூன்று மணி அளவில் கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த சொகுசு காரில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் பயணித்து வந்துள்ளனர். அப்போது திடீரென காரில் இருந்த பெண் ஒருவர் அலறி கூச்சலிட்டுள்ளார். நீண்ட நேரமாக அந்த பெண் கூச்சலிட்டபடியே வந்துள்ளதால் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது போதையில் இருந்த இளம் பெண் சக ஆண் நண்பர்களை ‘இப்படி செய்வீயா...’ என்று கூறியபடி தனது செருப்பால் அடித்துள்ளார். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக்(27), சக்தி(28), கவுதம்(28) என்றும், இன்ஜினியர்களான இவர்கள் சென்னை துரைப்பாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மூன்று பேரும் உடன் பணியாற்றும் இளம் பெண் இன்ஜினியரை நேற்று இரவு தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் மது விருந்துக்கு தங்களது காரில் அழைத்து சென்றுள்ளனர். பிறகு நான்கு பேரும் அதிகளவில் மது குடித்துவிட்டு நடக்க முடியாத அளவில் தங்களது காரில் சென்றுள்ளனர்.

அப்போது காரில் உடன் வந்த பெண் இன்ஜினியரை பாலியல் ரீதியாக ஆண் நண்பர்கள் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. போதையில் இருந்த பெண் இன்ஜினியர், தனது ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றுங்கள் என உதவி கேட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது சக ஆண் நண்பர்கள், தங்களை மன்னிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மன்னிக்க முடியாது என்று கூறி செருப்பால் அடித்ததும் தெரியவந்தது. இதில் நான்கு பேரும் அதிக அளவில் போதையில் இருந்ததால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் ஆடைகள் கலைந்தும், சற்று கிழிந்தும் இருந்ததால் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் போலீசார், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார், பாலியல் தொந்தரவு கொடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு நபர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதே போல் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு போதை தெளிந்தால் தான் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT