மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு அன்புமணி அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 27 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைத்துள்ளது மத்திய சுகாதாரத் துறை. அதனைச் சுட்டிக்காட்டியும் அநீதியைச் சரி செய்ய வலியுறுத்தியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார் பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி இராமதாஸ்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், ‘’முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதைச் சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் சமூக நீதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், போராடிப் பெற்ற பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அர்த்தமற்றுப் போய்விடுமோ? என்ற அச்சமும், கவலையும் தான் எனக்குள் வருகிறது.
மீதமுள்ள இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 7,125 இடங்கள் அதாவது 74.60% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கான இடங்களில் 653 (7.00%) இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர்த்த 371 இடங்கள், அதாவது 3.8% இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்துள்ளது.
தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences), வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி(Vardhman Mahavir Medical College -VMMC), லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி (Lady Hardinge Medical College), பெங்களூரில் உள்ள இ.எஸ்.ஐ. முதுநிலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ESI Post Graduate Institute of Medical Science and Research) போன்ற மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தான் இந்த இடங்களாவது பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மற்ற பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருவேளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன்மூலமே உண்மையான சமூகநீதியை உறுதிப்படுத்த முடியும்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 24 வகையான மருத்துவ மேற்படிப்புகளில் 1,758 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத, அதாவது 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50 சதவீத இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஓர் இடம் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப் படவில்லை. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதால், அதைச் செயல்படுத்த வேண்டியதும், அதன் அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கான இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியதும் மத்திய அரசின் கடமை.
அதுமட்டுமின்றி, நடப்புக் கல்வியாண்டிலேயே மருத்துவ மேற்படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிர்வாக நடவடிக்கைகளையும், தேவைப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்‘’ என மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.