ADVERTISEMENT

“தேர்ச்சி பெற்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

02:47 PM Jun 26, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கு, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகர்களாக கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம். ஒருவேளை ஆகமத்தைப் பின்பற்றாத கோயில்களில் ஆகமத்தைப் படிக்காதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிப்பதற்குள் எப்படி அர்ச்சகர்களை நியமிக்க முடியும் உள்ளிட்ட 3 வாதங்களை எதிர் தரப்பினர் முன்வைத்தனர். பின்பு எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல், ஆகமம் கற்றுத் தேர்ச்சி பெற்றால் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளனர்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT