ADVERTISEMENT

நகைக்கடை உரிமையாளரைக் கடையில் புகுந்து தாக்கிய அதிமுக பிரமுகர்; வெளியான பகீர் சிசிடிவி காட்சி

11:06 AM Mar 08, 2024 | mathi23

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், வேலூர் மாநகர் காந்தி ரோட்டில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (07-03-24) மாலை வழக்கம்போல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து, ஆனந்தன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘சேண்பாக்கம் பகுதியில் எனக்கு சொந்தமான நீச்சல் குளம் இருக்கிறது. இதனால், அதே பகுதியை சேர்ந்த, அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், தலைமையிலான 4 பேர் அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர். அவர்களை நான் கண்டித்ததற்கு அந்த 4 பேர், என்னுடைய கடைக்கு வந்து என்னை தாக்கி, கடையை சேதப்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, நகைக்கடை உரிமையாளர் தாக்கப்பட்டதால், காந்தி நகர் பகுதியில் உள்ள நகை கடைகள் அடைக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ஆனந்த் மீது தாக்குதல் நடத்திய அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ், நல்லதம்பி, கார்த்திகேயன், அரவிந்த்சாமி, டக்கர் (எ) ஜானகிராமன் ஆகியோரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நகைக்கடை உரிமையாளரை கடையில் வைத்து தாக்கியபோது பதிவாகிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT