ADVERTISEMENT

அக்ரியான்ஸ்'97'-25 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய வேளாண் மாணவர்கள்

07:20 PM Dec 18, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறையில் கடந்த (1993-97) இளங்கலை வேளாண்மை கல்வி பயின்ற 120 மாணவ மாணவிகள் பயின்றுள்ளனர். இவர்கள் கல்லூரியை முடித்த பின்பு பட்ட மேற்படிப்பு மற்றும் அரசு மற்றும் தனியார் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் வேளாண் விஞ்ஞானிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், தமிழக அரசின் பனை நல வாரிய உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக (அக்ரியான்ஸ்97) என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் பத்மநாபன், சுனில்குமார், சுதாகர் ஆகியோர் அப்போது படித்த அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கிணைத்து குடும்பத்துடன் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ள சமூக வலைத்தளங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் ஒன்றுகூடி கல்லூரி காலங்களில் நடைபெற்ற சம்பவம் அதன்பிறகு குடும்ப நிகழ்வுகள் குறித்து மலரும் நினைவுகளைப் பேசி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வேளாண்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு ரூ 4 லட்சம் பணம் ஒதுக்கீடு செய்து, தனி அறக்கட்டளை தொடங்கி அதில் வரும் வட்டியை வைத்து விவசாயத் துறையில் பயிலும் மாணவ மாணவிகள் யுபிஎஸ்சி தேர்வு உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் வகையில் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டுவது என பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுறுத்தியதின் பெயரில் தற்போது உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏழை மாணவனை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்விக்கான செலவுகளை ஏற்பது என உறுதி ஏற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் 90 குடும்பங்களைச் சேர்ந்த வேளாண்துறையில் பயின்றவர்கள் 25 ஆண்டுகள் கடந்து மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்ட நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT