ADVERTISEMENT

ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு!!

06:29 PM Nov 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது.


தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூன்றாவது மகன் அசோக் என்ற சொக்கநாதர், தனது 13 வயதில் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சொக்கநாதர், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்குச் சென்றுள்ளார். அங்கு சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று, அவர் அகோரியாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு வந்தார். அப்போது தனது கிராமத்தில் உள்ள மக்களிடம், தன்னை சிவனின் அருள் பெற்றவர் என்றும் கூறினார். இது தவிர, தான் முக்தியடைந்து ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறிவந்தார்.

நேற்று முன்தினம் இரவு சிவனின் உத்தரவின்பேரில், அருகே உள்ள தோட்டத்தில் ஜீவசமாதி ஆகப்போகிறேன் என்றும் அதற்காகக் குழி தோண்டி அதில் இறங்கப் போவதாகவும் அங்குள்ள பக்தர்களிடம் சொக்கநாதர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்தனர். அதன்படி நேற்று காலை மொட்டனூத்துவில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி ஆழக் குழி வெட்டப்பட்டது. பின்னர் அந்தக் குழியில் சிமென்ட் சிலாப் கல் வைத்து, சமாதி போன்ற அமைக்கப்பட்டது. அந்தச் சமாதிக்குள் சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து சொக்கநாதர் அதற்குள் அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினார்.

சமாதியின் மேல் பகுதியை சிமெண்ட் கலவை வைத்து மூடி விடும்படி பக்தர்களிடம் கூறி உள்ளே அமர்ந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஜீவசமாதி அடையப்போவதாக குழிக்குள் இறங்கிய அகோரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர் கூறியதாவது, நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கு சென்று சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறி, 25 ஆண்டுகளாகவே உணவு சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் அகோரியாக மாறி சாகாவரம் பெற்றுள்ளேன். நான் 24 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டேன். தற்போது பல பிறவிகள் எடுத்து மீண்டும் உயிருடன் இருக்கிறேன். கடவுளின் உத்தரவின்பேரில் இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புவந்து அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருப்பணி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். நேற்று முன்தினம் இரவு சிவன் எனக்கு ஒரு உத்தரவை வழங்கினார்.

அதன்படி நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள், பிணிக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வறட்சியும் நிலவுகிறது. மக்கள் நோயின்றி வாழவும் அவர்களைக் காப்பாற்றவும் வேண்டும். அதற்காக ஒன்பது நாட்கள் இந்தக் குழிக்குள் தவமிருக்கப்போகிறேன் என்று கூறினார். மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் உயிருடன் வெளியே வருவேன் என்று கூறிவிட்டு அந்தக் குழியில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டார். இப்படி அகோரி ஒருவர் ஜீவசமாதி ஆகப் போகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் வேகமாகப் பரவியது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மொட்டனூத்து பகுதிக்கு குவிந்தவண்ணம் இருந்தனர்.


அகோரியிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழிக்குள் பூமி பூஜை செய்யக்கூடாது என்றும் அதற்கு அரசு அனுமதி இல்லை என்றும் கூறி வெளியே வரும்படி கூறினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குழிக்குள் இருந்த அகோரி சொக்கநாதர் வெளியே வந்து, அவர் ஜீவசமாதி ஆவதற்குரிய இடத்திற்கு அருகிலேயே சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப் போவதாகக் கூறி அங்கு அமர்ந்து கொண்டார்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பொது மக்களின் வருகை அங்கு அதிகமாக இருப்பதாலும் மீண்டும் அந்த அகோரி இறங்கவிடாமல் தடுப்பதற்காகவும் மொட்டனூத்து கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT