ADVERTISEMENT

காலம் தாழ்த்தும் மத்திய அரசு; குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

05:41 PM Jun 26, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இதையடுத்து குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததாலும், திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இன்னும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி குட்கா வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கியதுடன் வழக்கை ஜுலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இன்று வரை 10 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT