Skip to main content

சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக உத்தரவிட்டதன் பின்னணி!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
sasikala



குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் டிஜிபி அசோக் குமார் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று காணவில்லை என இப்போது இருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மதுரை கோர்ட்டில் தெரிவித்திருந்தார். 
 

ஆனால் வருமான வரித்துறையினரின் சோதனையின்போது போயஸ் கார்டனில் அந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 

 மேலும் ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன் ஆகியோரிடமிருந்து ஜெயலலிதா கைப்பற்றி வைத்திருந்த சொத்து விவர பட்டியலும் கண்டுபிடிக்கப்பட்டது.
 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது குட்கா ஊழல் பற்றிய கேள்விகளையும் கேட்டுள்ளனர்.
 

சொத்துக்கள், வருமானம் பற்றிய கேள்விகளுக்கும், குட்கா ஊழல் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்த சசிகலா, எல்லாமே ஜெயலலிதாவுக்குத்தான் தெரியும். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது எனக் கூறியுள்ளார்.
 

இதனிடையே சென்னை சிபிஐ அலுவலகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜரானபோது குட்கா ஊழல் தொடர்பாக சசிகலாவுக்கு தெரியும், அவருக்கும் தொடர்பு உள்ளது என கூறியிருக்கிறார்.
 

விஜயபாஸ்கரின் உதவியாளர் அளித்த இந்த தகவல் சசிகலாவிடம் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணன் சொன்ன தகவலை வைத்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தயுள்ளனர்.
 

இதன் எதிரொலியாகத்தான், சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

விஜயபாஸ்கர் ஆஜராவாரே தவிர அவர் மீது கைது நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் இருக்காது எனவும், சிபிஐ தரப்பில் பேசப்பட்டு விட்டது எனவும், அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக மாதவராவ் வாக்குமூலம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து, அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் ரமணாவும் இன்று பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.