இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் அமர்வு முன்பு இன்று (09.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாளையாறு மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இருந்து ஏடிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஷகான், கனகராஜ் ஆகியோர் ஆஜரானர்கள். அப்போது தேசிய தடயவியல் ஆய்வகக் குழு சேகரித்த தகவல் குறித்து அறிக்கை வராததாலும், இந்த குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்ய உள்ளதாலும் சிபிசிஐடி தரப்பில் இருந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவிரி 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.