/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kodanadu_25.jpg)
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தினேஷின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற புதிய நீதிபதியாக அப்துல் காதர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் தொலைத் தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் இருந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். மேலும் ஜூலை 12 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது கொடநாடு பங்களாவில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் நீதிபதி அப்துல் காதரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு உதகை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுசிபிசிஐடி எஸ்.பி. மாதவன் ஆஜரானார். மேலும் சிபிசிஐடி கடந்த 10 மாதங்களாக நடத்திய விசாரணை தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கைச் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (08.09.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசாரால், நீதிபதி அப்துல் காதரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே 167 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், செல்போன் டவர் மற்றும் இதர விபரங்கள் குறித்தும், கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதால் கால அவகாசம் வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணை அதிருப்தி அளிப்பதாக மாவட்ட நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)