ADVERTISEMENT

சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா; கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

10:18 AM Jan 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 133-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது ஏழை மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் கல்வி நிறுவனங்களை நிறுவிப் பல்வேறு ஏழை மாணவர்களுக்கு கல்வி அறிவை வளர்த்து வந்தார். தொடர்ந்து 35 ஆண்டுகளாக சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வந்தார். அவரது தொடர் முயற்சியால் 1947-ல் அனைவரும் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்படி பல்வேறு சமூக நலனில் ஈடுபட்டவருக்கு, இவர் வாழ்ந்த இடமான சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரது 133-வது பிறந்த நாள் நிகழ்ச்சி மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் ( ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நந்தனார் பள்ளியின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மணி மண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்து கூறினார். அப்போது அவர் பேசுகையில் இந்தப்பள்ளி வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்தது. இங்குக் கல்வி பயின்றவர்கள் பல்வேறு நிலைகளில் வாழ்வில் உயர்வடைந்துள்ளனர். தற்போது படிக்கும் மாணவர்களும் சகஜானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை நன்கு படிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி அரசின் உயரிய பதவிகளுக்குச் செல்ல வேண்டும் எனப் பேசினார்.

இந்நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் குகநாதன், உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள். கிள்ளை பேரூராட்சி துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT