ADVERTISEMENT

சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை கோரிய மனு! -பதிலளிக்க நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:16 AM Sep 23, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சக்ரா படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால்- நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாகக் கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் ஒரு கதையைச் சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் "சக்ரா" என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை, இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமென ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். இதுபோல, தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்கவும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட வேண்டுமென, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால், குறுகிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, வழக்குகள் குறித்து செப்டம்பர் 24- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT