
'சக்ரா' பட விவகாரம் தொடர்பாக, டிரைடென்ட் பட நிறுவனத் தயாரிப்பாளருக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையிலான பிரச்சனைக்குத் தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால்- தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால், 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி, டிரைடென்ட் நிறுவனத்தின் ரவீந்திரனிடம் நடிகர் விஷால் உறுதி அளித்து, ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் 'ஆக்ஷன்' படத்தால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி, அதைப் படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை, இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தைச் செலுத்தி, சக்ரா படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில், மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23- ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும்’ என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மத்தியஸ்தர் நியமனம் குறித்தும், சமரச தீர்வு காணும் வரை ஒரு கோடி ரூபாயை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளரின் பெயரில் டெபாசிட் செய்வது குறித்தும் விளக்கமளிக்க, இரு தரப்புக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். அதேபோல, ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, 'சக்ரா' பட விவகாரம் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமித்துள்ளது. 4 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சமரசத் தீர்வு சட்டப் பிரிவுகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஒப்புதல் அளித்தபடி, ஒரு கோடி ரூபாயை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பெயரில் 14 நாட்களில் டெபாசிட் செய்து, தலைமைப் பதிவாளரிடம் ரசீதைச் சமர்ப்பிக்க, விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.