/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_48.jpg)
நடிகர் விஷால், நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடவா' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்கு தடை விதிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அந்த விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விஷால் மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார். பின்பு இந்த வழக்கின் விசாரணையை செப். 9ம் தேதி (இன்று) ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று, உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், விஷால் நேரில் ஆஜராகவில்லை. பின்பு விஷால் தரப்பின் வழக்கறிஞர், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இன்னும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவருக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)