ADVERTISEMENT

வாச்சாத்தி வன்கொடுமை; குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

02:18 PM Oct 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த கடந்த மாதம் 29 ஆம் தேதி (29.09.2023) சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் 19 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே வழக்கின் முதன்மை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட வனப்பணி அதிகாரி நாதன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்போது சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT