மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு கூடுதல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு நடப்பாண்டு 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது. 50% அல்லது 27% இடஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது. நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்நிலையில்,இடஒதுக்கீடு வழங்கினால், அதுகுழப்பத்தை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்துள்ளது.