காலியாக இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகளுக்கு கடந்த ஒன்பதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்கனவே இருந்த ராஜேஸ்வரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இறந்து போனார். அதனைத் தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், இதேபோல் தமிழ்நாடு முழுக்க காலியாக இருந்த கிராம ஊராட்சி இடைத்தேர்தல் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் போட்டிக்கு 75 வயது பாப்பாத்தி அம்மாள் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ராணி என்பவர் போட்டியிட்டார். இதில் பாப்பாத்தி அம்மாவுக்கு 1635 ஓட்டுகளும், ராணிக்கு 827 ஓட்டுகளும் கிடைத்தன. ராணியை விட பாப்பாத்தி அம்மாவுக்கு 808 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று பாப்பாத்தியம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற பாப்பாத்தி அம்மாளுக்கு தேர்தல் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் சான்றிதழ் வழங்கினார். 75 வயது பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பாத்தி அம்மாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.