ADVERTISEMENT

நெல்லையை அதிர வைத்த 5 கிலோ நகை கொள்ளை... ஆபரேஷனில் மாணவர்கள்

10:25 PM Apr 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

படித்து முன்னேற வேண்டிய அப்பாவி மாணவர்களை கிரிமினல்கள் தங்களின் சுய பாதுகாப்பிற்காக கொள்ளையில் ஈடுபட வைப்பது சமூகத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.

ஏப். 11 அன்று நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் நகரின் மெயின் பஜாரில் அலி ஜுவல்லர்ஸ், நகைக் கடை வைத்திருக்கும் மைதீன்பிச்சை இரவு 8.30 மணிவாக்கில் தன்னுடைய நகைக்கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு 5 கிலோ எடை கொண்ட கடை நகைகள் மற்றும் அன்றைய விற்பனையின் மூலம் வந்த 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை உள்ளடங்கிய பையுடன் தன்னுடைய டூவீலரில் வீடு திரும்பியிருக்கிறார். வழியோரத் திருப்பத்தின் பக்கம் மெதுவாக திரும்பிய மைதீன்பிச்சையைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று அரிவாளால் அவரின் தலையில் வெட்ட, படுகாயமடைந்த மைதீன்பிச்சை நிலைகுலைந்து சரிந்திருக்கிறார். சைக்கிள் கேப்பில் மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த நகைப்பையைப் பறித்துக்கொண்டு மின்னலாய் பறந்திருக்கின்றனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மைதீன்பிச்சையை ஸ்பாட்டுக்கு வந்த வீரவநல்லூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு விசாரணையைக் கிளப்பியிருக்கிறார்கள். கொள்ளை போனது நகைகள் பணம் உட்பட மதிப்பு 2.52 கோடி என்ற அளவிலான மெகா கொள்ளை. தென்மாவட்டத்தில் நடந்த மிகப் பெரிய கொள்ளை என்பதால் உயரதிகாரிகளான நெல்லை ரேன்ஞ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட எஸ்.பி.யான சரவணன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் முற்றுகையிலிருந்து கொள்ளைச் சம்பவ இடம். அதே சமயம் ஓவர் நைட்டில் பரவிய கொள்ளைத் தகவல் மாவட்டத்தையே உலுக்கியிருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்கவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்கவும் 6 தனிப்படைகளை அமைத்திருக்கிறார் எஸ்.பி. சரவணன்.

தற்போதைய டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்திக் கொண்ட தனிப்படையினர் அதன் மூலம் கொள்ளைக் கோஷ்டி எஸ்கேப் ஆகாமலிருக்க சுறுசுறுவெனச் செயல்பட்டவர்கள், சுதாகர் (18) அழகுசுந்தரம், மருதுபாண்டி, ஐயப்பன், இசக்கிபாண்டி அடுத்து பத்தாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் (தடை காரணமாகவும் மைனர்கள் என்பதாலும் பள்ளி மாணவர்களின் பெயரும் படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.) என்று ஏழு பேர்களை அள்ளியவர்கள் அவர்களிடமிருந்து 4.5 கிலோ நகைகளை மீட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவைகள் விசாரணையிலிருக்கிறது. ஒரு வழியாக கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டாலும், தனிப்படையினரின் தேடலில் சுணக்கத்தையும் அவர்களை ரவுண்டில் விடக் காரணமாக இருந்தவர்கள் பள்ளி மாணவர்கள். ஏனெனில் போலீசின் சந்தேகப்பார்வை அவர்கள் மீது திரும்பாது என்ற திட்டத்தில் கொள்ளையர்கள், மூன்று மாணவர்களையும் பயன்படுத்திக் கொண்டதுதான் காவல் துறையையும் சமூகத்தையும் அதிர வைத்திருக்கிறது.

பிடிபட்டவர்கள் அனைவரும் வீரவநல்லூரின் அண்டைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அழகுசுந்தரம், மருதுபாண்டி, ஐயப்பன் மூன்று பேர்களும் திருட்டுகளில் தொடர்புடையவர்கள். ஸ்பாட்டுக்கு வராமல் மாணவர்கள் மூவர் உட்பட புதியவர்களை தாங்கள் தப்பிக்கிற வகையில் இந்த ஆபரேஷனில் டெக்னிக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சிக்கிய மாணவர்களில் சுதாகர் 18 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவன். சுமார் 15 வயதுடைய 2 மாணவர்களும் 10ம் வகுப்பு பயில்பவர்கள். வாலிப முறுக்கில் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் சுதாகர் இளம் பெண்கள் சகவாசம் கொண்டவன். தன்னைப் பணக்காரவீட்டுப் பிள்ளை என பில்டப் செய்துகொண்டு அவர்களுக்குப் பிறந்தநாள் பரிசு, புத்தம் புது ஆடைகள் என்று பரிசளித்தே, கடனாளியானவன். ஒரு முனையில் கடன் நெருக்கம், மறுமுனையில் சுகமாக செட்டிலாக வேண்டுமென்ற என்ற தன் எண்ணத்தையும் திட்டத்தையும் தனது பகுதியின் அழகு சுந்தரத்திடம் வெளிப்படுத்தியிருக்கிறான்.

மாணவன் சுதாகரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அழகுசுந்தரத்தின் உள்ளங்கை அரிப்பெடுத்திருக்கிறது. லம்ப்பாக அடித்து விட்டு செட்டிலாக வேண்டும் என்றிருக்கிறான் அழகுசுந்தரம். அழகுசுந்தரம், தன் சகாக்களை நேரடியாக களமிறக்காமல் அவர்களை மறைமுகமாக வைத்துக் கொண்டவன், தகவல் தொடர்பிற்காக சுதாகரைப் பயன்படுத்தியவன் உடன் பத்தாம் வகுப்பு மாணவர்களையும் இணைத்திருக்கிறான்.

கொள்ளையில் பிடிபட்டவர்கள் அனைவரும் சுக, துக்க வீடுகளின் நிகழ்ச்சிகளில் மேளம் அடிப்பவர்கள். அதுசமயம் வீரவநல்லூர் பஜார் நகைக்கடைகள் பக்கம் நின்று கடைகளை நோட்டமிட்டிருக்கின்றனர். அப்போது தான் நகைக் கடை அதிபர் மைதீன்பிச்சை இரவு கடையைப் பூட்டிவிட்டு கடையிலுள்ள நகைகளை அங்கு வைக்காமல் பாதுகாப்பின் பொருட்டு பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவதையறிந்து அவரைக் குறி வைத்திருக்கிறார்கள். அவரை நோட்டமிட இரண்டு பள்ளிச் சிறுவர்களோடு அண்ட்ராய்ட் போன் கையாள்வது மற்றும் வழியோர சி.சி.டி.வி. புட்டேஜ்களிலிருந்து தப்பிக்கும் டெக்னிக் அறிந்த மாணவன் சுதாகர் உள்ளிட்ட மூன்று மாணவர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது பள்ளி மாணவர்கள் மைதீன்பிச்சையின் கடைப்பக்கம் நின்று அவரை நோட்டமிட்டவர்கள் அவர் நகைப் பையுடன் கிளம்புவதையும் செல்லும் வழி, அவர் திரும்புமிடம் போன்றவைகளை லைவ்வாக தங்கள் செல்மூலம் சுதாகருக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். சிறுவர்கள் என்பதால் நகைக்கடை பஜார் வியாபாரிகளுக்குச் சந்தேகம் கிளம்பவில்லையாம். மாணவர்களின் தகவலைக் கொண்டு அவ்வப்போது, கொள்ளைப்பார்ட்டியை உஷார் படுத்தியிருக்கிறான் சுதாகர். இவர்களின் நெட்ஒர்க் மூலம் மைதீன்பிச்சையைப் பின்தொடர்ந்தவர்கள் அவரைவெட்டிவிட்டு நகைப்பையை பறித்துச் சென்றிருக்கிறார்கள்.

இவர்களின் ஆபரேஷன் முடிந்த பின்னர் தொடர்ந்து சகாக்களுக்கு டைரக்ஷன் கொடுத்த சுதாகர், வழியோர சி.சி.டி.வி கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதற்காக மெயின் சாலையை விட்டு விலகி வீரவநல்லூரின் கிளாக்குளம் வழியாக வாய்க்கால் கரையோரமாக காருக்குறிச்சிவந்து பின்னர் திருப்புடைமருதூர் வந்தவர்கள் அங்கு கொள்ளையடிக்கப்பட்டதைப் பங்கு போட்டுள்ளனர். இந்த ஸ்பாட்டிற்கு பல கைகள் மாறி நகைப்பை கொண்டு வரப்பட்டிருக்கிறதாம்.

இந்தக் கொள்ளைச் சம்பவ விசாரணையின் தனிப்படையினர் வழியோர சி.சி.டி.வி. புட்டேஜ்களை ஆராய்ந்ததில் மைதீன்பிச்சையை நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற பைக்கில் இருவர் பின் தொடர்வதும் பின்னர் அவர்கள் நகைப் பையுடன் மின்னல் வேகத்தில் பறப்பது மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர்களின் விசாரணையில் முன்னேற்றமில்லையாம். சம்பவத்தின் போது மைதீன்பிச்சை கடைப்பக்கமுள்ள புட்டேஜ்களை ஆராய்ந்ததிருக்கிறார்கள். அதிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் தென்படவில்லையாம். ஏனெனில் அந்தப்பக்கம் நோட்டமிட பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதும் ஒரு காரணம். எனவே தவித்த தனிப்படை நகைக்கடைப் பக்கமுள்ள செல்டவர் லைன்களை ஆராய்ந்திருக்கிறார்கள். அவைகளில் ஒரு குறிப்பிட்ட நம்பரிலிருந்து அடிக்கடி ஒரு நபர் சம்பவத்திற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து மூன்று மணிநேரம் பேசியதும், சம்பவத்திற்குப் பின்பு அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி, ஒரு மணிநேரத்திற்குப் பின்பு ஆன் செய்யப்பட்ட செல் நம்பரில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டதையும் கண்டு சந்தேகப்பட்ட தனிப்படை, சந்தேகத்திற்குரிய அந்த நம்பர் குறித்து விசாரித்ததில் அது வீரவநல்லூரையடுத்த பாறையடி காலனியின் மாணவன் சுதாகருக்குரியது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். சுதாகரைத் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்த தனிப்படையின் சிறப்பு விசாரணையில் நடந்தவைகளை முழுவதுமாக வெளிப்படுத்தியவனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தூக்கியவர்கள், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் மீட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து நாம் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சரவணனிடம் பேசியதில், இந்தக் கும்பலில் மருதுபாண்டி, ஐயப்பன் இருவரும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள். போலீசாரின் விசாரணை மற்றும் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, தகவல்கள் தரவும் ஷேடோ செய்யவும் மாணவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சந்தேகத்தைக் கிளப்பவில்லை. ஒரு சில மணி நேரம் தாமதித்திருந்தால் நகைகள் பல கைகள் மாறிப் போயிருக்கும். விரைவாக செயல்பட்டதால் மீட்கப்பட்டுள்ளது என்கிறார்.

வருமானத்தைப் பறித்த கரோனாவின் கோரக் கொடுக்குகள், வறுமை, போன்றவைகளே இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT