அதிகாலை நேரத்தில் அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு ஈச்சர் லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியை திருவையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்தார். லாரி, நமணசமுத்திரம் பகுதிக்கு வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, டீ கடைக்குள் புகுந்தது. இதில், டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் வந்த வேன்கள், கார், அதே பகுதியை சேர்ந்தவர்களின் பைக் ஆகியவை மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், லாரிக்குள் சிக்கி பலத்த காயமடைந்து சாந்தி, ஜெகநாதன், சுரேஷ், சதீஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டீ கடைகாரர், லாரி ஓட்டுநர், பக்தர்கள், 3 வயது குழந்தை என 19 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையிலிருந்து திருமயத்திற்குள் அடிக்கடி இது போன்ற கோர விபத்துகள் நடந்துவருவதால், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.