லஞ்சம் பெற்று, சோதனையில் பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை 4 கோடியே 29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 54 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத 519 சவரன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி, வங்கி இருப்பு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை, பத்திரப்பதிவு, பொதுப்பணி, வருவாய், மாசுக் கட்டுப்பாடு, வேளாண் மற்றும் மின்துறை ஆகிய துறைகளிலும் லஞ்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது. அதிகபட்சமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் 3.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லஞ்சம் கொடுத்தபொழுது கையும் களவுமாக 16 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.