Skip to main content

குற்றவாளிகளுக்கு சல்யூட்! -போலீசாரை மாமூல் படுத்தும்பாடு!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

‘குற்றமிழைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவுசெய்யாத போலீஸ் அதிகாரி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை? மாமூல் வசூலித்ததாக கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?’

தமிழ்நாடு மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன்,  தானாக முன்வந்து விசாரித்த வழக்கு ஒன்றில் இவ்வாறு கேள்விகளை எழுப்பி,  காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.  

police


விருதுநகர் மாவட்ட காவலர் ஒருவர், நீதிபதியின் மேற்கண்ட உத்தரவைச் சுட்டிக்காட்டி, காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றிவரும் தன்னை உறுத்திக்கொண்டிருக்கும் விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். அவர் அளித்த தகவல் இது -  

police


சார்பு ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட நால்வர் கொண்ட தனிப்படையினர், விருதுநகர் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிவந்திபட்டி கிராமத்திற்கு அருகில், அதிகாலை 2 மணியளவில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி (TN 67 BH 1989)  வாகனத்தை வளைத்தனர். இச்சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வீரார்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் அருண், மணியம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் உட்பட மொத்தம் ஐந்து பேரையும்,  அங்கிருந்த ஸ்ப்லெண்டர் டூ வீலரையும், ஜேசிபி வாகனத்தையும் கைப்பற்றி,  அதிகாலை 3 மணிக்கெல்லாம் அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையம் சென்றனர். இந்த விஷயம் அறிந்து,  காலை 8 மணிக்கு அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையம் வந்தார் சாத்தூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன்.  “உன்னை யாரு அங்கே போகச்சொன்னது? நீ இவ்வளவு நாள் ஸ்பெஷல் டீம்ல இருந்தது போதும். அதான்.. உனக்குதான் ஏற்கனவே டிரான்ஸ்பர் போட்டாச்சுல்ல.. போய் உன்னோட ஸ்டேஷன்ல வேலை பாரு..” என்று சார்பு ஆய்வாளருக்கு சுடச்சுட ‘டோஸ்’ விட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினார். அந்தத் தலைமைக்காவலர் நேர்மைக்குப் பெயர் போனவராம்.  யாரிடமும் டீ கூட வாங்கிக் குடிக்க மாட்டாராம். அவரிடமும் “நீ ஸ்பெஷல் டீம்ல கிழிச்சது போதும். போய் ஸ்டேஷன் ட்யூட்டிய பாரு.” என்று அவமரியாதையாகப் பேசியிருக்கிறார். மணல் அள்ளிய 5 பேரையும், அவர்களுடைய ஜேசிபி வாகனத்தையும் டூ வீலரையும், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மொத்தமாக விடுவித்துவிட்டார். 

 

police


“சாத்தூர் உட்கோட்டத்தில் இது  ‘மாமூலாக’ நடப்பதுதான்”  என்று ஆதங்கத்துடன் அந்தக் காவலர் கூற, சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம்.  “நான் யார்கிட்டயும் போன்ல பேச மாட்டேன்.” என்று நம்மைத் தவிர்க்க நினைத்த அவரிடம் “குற்றச்சாட்டே உங்கள் மீதுதானே?” என்று தொடர்ந்து கேள்வி கேட்க, “மொதல்ல போனை வைங்க..” என்றார் எரிச்சலுடன். சம்பந்தப்பட்ட அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையமோ “அப்படியா நடந்துச்சு?” என்று போலியாக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. 

குட்காவிலிருந்து மணல் வரை,  தமிழக காவல்துறை அதிகாரிகள் பலரையும் மாமூல்தான் ஆட்டிப்படைக்கிறது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.