ADVERTISEMENT

சாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்.... கனிமவளத்துறை வசம் சிக்கிய சாமியார்!

06:44 PM Aug 18, 2019 | kalaimohan

சென்னையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு செய்வினை தகடை எடுப்பதாக நடு வீட்டில் 25 அடிக்கு ஆழமாக குழி தோண்டியதால் போலிஸ் மட்டுமில்லமால் கனிம வளத்துறையின் பிடியில் சிக்கி இருக்கிறார் பெண் ஒருவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை டிபி சத்திரத்தில், கேவிஎன்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். மைதிலி ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாக ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை எடுத்தால்தான் குடும்பம் வளம்பெறும் என்றும், இல்லையெனில் உங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து ஒருநாள் ராஜாவின் கை, கால்கள் திடீரென செயலிழந்தந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்த்து கணவருக்கு சிகிச்சை அளிக்காமல் கணவர் ராஜாவை மின்ட் தங்கசாலையில் உள்ள மந்திரவாதியான சுரேஷ் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் மைதிலி. அவர்களிடம் இருந்த பணத்தை நைசாக பேசி உருவிக்கொண்ட அந்த மந்திரவாதி வீட்டிற்குள் செய்வினை தகடு ஒன்று புதைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதனைத் தோண்டி எடுத்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும், கணவர் ராஜாவிற்கும் உடல்நிலை சரியாகி விடும் என்றும் கதை அளந்து விட்டுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய மைதிலி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்திரவாதியின் துணையுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் தகட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு நடுவில் குழி தோண்டி தகட்டை தேடியுள்ளார். கயிற்றைக் கட்டி கிணறு போல் 25 அடி ஆழத்திற்கு தோண்ட, மூட்டை மூட்டையாக மண் வந்ததே தவிர தகடு ஏதும் கண்ணில் அகப்படவில்லை.

இப்படி வீட்டின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை மூட்டையாக கட்டி வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார் மைதிலி. இரவில் மைதிலியின் வீட்டில் ஏதோ நடக்கிறது, வீட்டுக்கு வெளியில் ஏன் இவ்வளவு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மைதிலியின் வீட்டிற்கு வெளியே 70 மூட்டை மண் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.


அப்போது அந்த விசாரணையில் செய்வினைக்கு வைக்கப்பட்ட தகட்டை எடுப்பதற்காக நடுவீட்டில் இருபத்தைந்து அடிக்கு குழி தோண்டியது வெளி வந்தது. இது தொடர்பாக மைதிலி, அவருடைய கணவர் ராஜா, அந்த மந்திரவாதி சுரேஷ் ஆகியோரை விசாரித்த காவல்துறையினர் கனிமவள துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது மூவரும் கனிம வளத்துறை அதிகாரிகளின் வசம் உள்ளனர்.

செய்வினை கோளாறு என்று நம்பி நடு வீட்டில் 25 அடி ஆழத்திற்கு குழியை தோண்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT