ADVERTISEMENT

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. 2 மீனவர்கள் சடலமாக மீட்பு... மாயமான மீன்வர்களை தேடும் பணி தீவிரம்...

02:33 PM Jan 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2 நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்ததில், 4 மீனவர்களின் உயிர் பறிபோனது. இதில் 2 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 2 பேரின் நிலைமை தெரியாமல், கலங்கி நிற்கின்றனர் உறவினர்கள். இறந்தவர்களின் சடலத்தை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்து, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 214 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான படகில், மெசியா(30), தங்கராஜ்(52), ஷாம்(28), செந்தில்குமார்(32), ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதனால், அவசர அவசரமாக மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது, எதிர்பாரதவிதமாக இலங்கையின் ரோந்து கப்பல் மீது, ஆரோக்கிய சேசுவின் படகு மோதியது. இதில், ரோந்து கப்பலின் ஒரு பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் மீண்டும் ரோந்து கப்பலால் படகை மோதச் செய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த சேதமடைந்த படகு, சிறிது நேரத்தில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக சக மீனவர்களை வாக்கி - டாக்கியில் அழைத்து உதவி கோரி இருக்கின்றனர் படகில் இருந்த 4 மீனவர்களும். ஆனால், அதே பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் முகாமிட்டிருந்ததால், சக மீனவர்களால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் ஒருவரிடம் பேசினோம். “இந்த கரோனா காலத்தில் சரியா தொழில் பண்ண முடியவில்லை. அதுக்குப் பிறகு இப்பத்தான் 4 கடல் (4 முறை மீன்பிடிக்க) போயிருக்கோம். 40 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிச்சிருச்சு. இதைக் கண்டிச்சு 2 வாரம் வேலை நிறுத்தம் செஞ்சோம். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதுக்கு இடையில் கோட்டைபட்டினத்தில் இருந்து சென்ற எங்க ஊர் மீனவர்கள் 4 பேரை அடித்தே கொன்று, படகோட மூழ்கடிச்சிட்டாங்க. இப்போ, 2 பாடியை எடுத்திருப்பதாக கணக்கு காட்டுறாங்க. இனி 4 நாள் கழிச்சி 2 பாடியை கணக்கு காட்டுவாங்க. இத்தனைக்கும் நம்ம எல்லை பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்குது. இப்படி செஞ்சா எப்படி தொழில் பண்ண முடியும்?” என்றார் ஆற்றாமையோடு.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மீனவர்கள் மத்தியில் பேசிய அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்தால், அவர்களைப் படகோடு சிறைப்பிடித்து, என்னிடம் கொண்டு வாருங்கள். எத்தனை வழக்கு வந்தாலும் நான் சந்திக்க தயார்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT