ADVERTISEMENT

“இபிஎஸ் சொல்வது உண்மைக்கு புறம்பான செய்தி; அவர் கதையளக்கிறார்” - காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர்

07:50 AM Mar 23, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட்டை சவலைக்குழந்தை என விமர்சனம் செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், சர்க்கரை ஆலைகள். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், நெல் விவசாயிகளுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும், கரும்புக்கு ஆதார விலையாக ரூபாய் 4,500 எதிர்பார்த்த நிலையில், அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றும் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றியும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “2011 ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்யப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரம் எக்டராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பினை, 95 ஆயிரம் எக்டராக குறைத்து மாபெரும் சாதனை புரிந்தவர் தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர். கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்து வந்த மாநில அரசு பரிந்துரை விலையை ரத்து செய்ததோடு இல்லாமல், 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மூடுவிழா கண்டவர். இன்று கரும்பு விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்.

2015-2016 அரவைப் பருவம் முதல் 2019-2020 அரவைப் பருவம் வரை கரும்பு விலையை உயர்த்தாமல் டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 மட்டுமே வழங்கி வந்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் 2020-2021 அரவைப் பருவ கரும்பு விலையாக, டன் ஒன்றுக்கு ரூபாய் 2,900 என்றும், 2021-2022 அரவைப் பருவ கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,950 என்றும் மேற்கண்ட இரண்டு அரவைப் பருவங்களுக்கும், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 365 கோடியே 12 இலட்சம் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கிட, வழிவகை கடனாக (Ways and Means) ரூபாய் 434 கோடியே 43 இலட்சம் இவ்வரசினால் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு விடுத்த வேண்டுகோள் காரணமாக, 1.9.2022 அன்றே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு இதுவரை 3,082 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 28.12 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 3.6 இலட்சம் விவசாயிகளுக்கு 5,620 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு, எதிர்பாராது பெய்த மழையையும் சமாளித்து, விவசாயிகள் பாராட்டும் வண்ணம் நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, மழையினால் பாதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசும் அதற்கான ஆணையை வெளியிட்டதை தொடர்ந்து, 20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற ஆணையும் வெளியிட்டு விவசாயிகளுக்கு உதவி புரிந்ததுள்ளது தற்போதைய அரசுதான். 56,180 தார்ப்பாய்களும் 57,590 தார்ப்பாலின் உறைகளும் அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் தேவைப்படும் அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சாதாரண இரகத்திற்கு முந்தைய அதிமுக அரசு, ரூபாய் 50 ஊக்கத்தொகையும், சன்ன இரகத்திற்கு ரூபாய் 70 ஊக்கத்தொகையும் கொடுத்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 75 எனவும் சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 100 எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பதவி ஏற்றவுடன், விவசாய பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்கு ரூபாய் 360 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டிலும் ரூபாய் 410 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு. ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, இதுவரை காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூபாய் 3,426 கோடி சுமார் 20 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற இவ்வரசு, 2 வருட காலத்திலேயே இத்திட்டத்திற்கென ரூபாய் 4,639 கோடி வழங்கியதோடு மட்டுமல்லாமல், 2023-2024 ஆம் ஆண்டு இத்திட்டத்தினை செயல்படுத்த ரூபாய் 2,337 கோடியும், ஆக மொத்தம் ரூபாய் 6,976 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கடந்த ஆட்சிக்காலத்தைவிட 265 சதவீதம் அதிகமாகும்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாகவும் விவசாயிகள் கட்டிய காப்பீட்டு பிரீமியத் தொகை கூட கிடைக்கவில்லை எனக் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இலவச மின்சார இணைப்பு வழங்காமல் இருந்துவிட்டு, இப்பொழுது மும்முனை மின்சாரம், இருமுனை மின்சாரம் என்று கதை அளக்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கப்பட்டதன் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு 1 இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டராக தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு உயர்ந்திருக்கிறது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT