Skip to main content

வன்னியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு!  சட்டமசோதா நிறைவேற்ற எடப்பாடி திட்டம்! 

Published on 18/02/2021 | Edited on 18/02/2021
ddd

              
வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தி (எம்.பி.சி.) அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இதனை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்! 
             

அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டோர் சமூக பட்டியலில் உள்ள அருந்ததியர்களும், ‘எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் ‘ என போராடினர். இதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை  நிறைவேற்றும் முகமாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (பி.சி.) முஸ்லீம்களை  பி.சி.(எம்) என வகைப்படுத்தி 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தந்தார் கலைஞர். அதேபோல, பி.சி (சி) என கிறுஸ்தவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அதேபோல, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் அருந்ததியர்களை  எஸ்.சி. (ஏ) என வகைப்படுத்தி 3 சதவீத உள் இடஒதுக்கீடு தந்தார் கலைஞர். ஒரு கட்டத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உள் இடஒதுக்கீடு வேண்டாம் என அரசிடம் தெர்வித்தது கிறுஸ்துவ சமூகம். அதனால் அவர்களின் இட ஒதுக்கீடு அமலில் இல்லை. 
                  

இந்த நிலையில், உள் இடஒதுக்கீடு என்கிற அளவுகோலை முன்னிறுத்தி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்து வந்தது வன்னியர் சமூக கூட்டமைப்பு. ஆனால், இதனை நிராகரித்து விட்டது தமிழக அரசு. 
                  

இதனால் அரசின் முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வன்னியர் சமூக கூட்டமைப்பு. அந்த வழக்கில், ’’பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் உள் இடஒதுக்கீடு தந்து அது சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அதனைப் பின்பற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களை எம்.பி.சி.(வி) என வகைப்படுத்தி உள் இடஒதுக்கீடு கொடுக்க மறுப்பது அநீதியானது ‘’ என வாதாடியது வன்னியர் சமூக கூட்டமைப்பு. 
                  

கூட்டமைப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவினை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி கருத்துரு கேட்டது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.  இதனை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது ஆணையம் ! 
                 

அந்த விவாதத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்காக அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் முடிவுகளையும்,  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையத்தின் பரிந்துரைகளையும் அலசி ஆராயப்பட்டன. இந்த ஆய்வுக்கு பிறகு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடாக 10.5 சதவீதம் தரலாம் என தமிழக அரசுக்கு தனது கருத்துருவையும் பரிந்துரையையும் அறிக்கையாகத் தந்தது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்! 
                      

ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இதில் கவனம் செலுத்தினாலும் முடிவு எடுக்கவில்லை. அப்படியே கிடப்பில் கிடந்த இந்த பிரச்சனையை கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவண்டி இடத்தேர்தலின் போது, ‘’ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவோம் ’’ என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது எதிர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘’ இது சாத்தியமில்லை. போகாத ஊருக்கு ஸ்டாலின் வழி சொல்கிறார் ‘’ என்று விமர்சித்திருந்தார். 
                 

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்தாததால் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வன்னியர் சமூக கூட்டமைப்பினர் தொடர்ந்தனர்.  அது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம். 
                   

இந்த சூழலில்தான், முதல்வர் எடப்பாடியின் ஒப்புதலுக்காக உள் இடஒதுக்கீடு கோப்புகள் கடந்த 6 மாதங்களாக அவரது மேஜையில் கிடக்கிறது. தற்போது இதற்கு எடப்பாடி ஒப்புதல் தந்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வருகிற 24-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.