ADVERTISEMENT

“இ.பி.எஸ். தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்...” - தொல். திருமாவளவன்

10:07 AM Mar 29, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 18 ஆம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

முன்னதாக அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இதனை ரத்து செய்யச் சொல்லி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், “பொதுக்குழு கூட்டியது செல்லும். பொதுக்குழுத் தீர்மானங்கள் குறித்து ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொதுச்செயலாளர் வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு நேற்று 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். அதேபோல், ஓ.பி.எஸ். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளார்.


இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான இ.பி.எஸ்.க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர், தொல். திருமாவளவன், “எடப்பாடி எப்படி வெற்றி பெற்றார்; ஓ.பி.எஸ். எப்படி வீழ்ச்சி அடைந்தார் என்பதற்குள் நான் நுழைய விரும்பவில்லை. எடப்பாடி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். அவருக்கு ஏதோ ஒரு வகையில் சங்க் பரிவார்களும் துணையாக இருக்கிறார்கள் என்பது யூகிக்க முடிகிறது. தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும். பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கமும் பாதிக்கப்படும். மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூகநீதிக்காக குரல் கொடுத்து, சமூக நீதியை பாதுகாத்துள்ளனர். அந்த இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூகநீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT