Skip to main content

நம்பி வரும் நிர்வாகிகளுக்கு ஃபைனான்ஸ் உதவி! உறவினர்கள் பிடியிலிருந்து வெளியேறும் சசி!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

ddd


ஒரு இழுபறிக்குப் பிறகு, ஜூன் 14ஆம் தேதியன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றத் துணைத்தலைவராக ஓ.பி.எஸ்., கொறடாவாக எஸ்.பி. வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், கட்சியைக் கைப்பற்றுவதற்காக நாடகமாடி கட்சியினருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடுவதாகவும், கட்சிக்கு எதிராக செயல்பட்டோரைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சசிகலா குடும்பத்தினர் என்றே வந்திருக்கிறது. முதன்முறையாக இப்போதுதான் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு பதவியைப் பெற்றவர்கள், சசிகலாவையே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.

 

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்சும் இதுவரை கிழக்கும் மேற்குமாகத்தான் இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது கூட்டத்திலிருந்து பாதியில் கிளம்பியவர்தான் ஓ.பி.எஸ். அந்தச் சண்டையின்போது, சசிகலாவின் ஆதரவாளரென்ற இமேஜ் ஓ.பி.எஸ்சுக்கு இருந்தது.

 

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 21ஆம் தேதி கூடியது. எனவே அதிமுக சட்டமன்ற நிர்வாகிகள் தேவை. எதிர்க்கட்சித் துணைத் தலைவராவதற்கு மறுத்தவர் ஓ.பி.எஸ். கொறடாவாக எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி பழனிசாமி கைகாட்ட, மனோஜ் பாண்டியனைக் கைகாட்டியவர் ஓ.பி.எஸ். இந்தச் சண்டை நடந்துகொண்டிருந்தபோதுதான் இன்னொரு பக்கத்தில் அதிமுகவினரோடு சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. சசிகலாவும் ஓ.பி.எஸ்சும் கைகோர்த்து அதிமுகவைக் கைப்பற்றுவார்கள் என்றும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சண்டையால் ஒத்திவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, சைலண்ட்டாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி சொன்னபடி எஸ்.பி. வேலுமணி கொறடாவாக வந்ததன்மூலம், அதிமுகவை கொங்கு வேளாளர்கள்தான் நிர்வகிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதுபோல சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ். கையெழுத்து போடுகிறார். இது அரசியல் பரமபத ஆட்டம்போல திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

கூட்டத்தில் பேசியது குறித்து விசாரிக்கையில், "ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்றுதான் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் ஒரு காம்ப்ரமைஸ் ஃபார்முலாவோடு பேசியிருக்கிறார்கள். அதன்படி, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக வந்தால், மாநில அமைச்சர் அந்தஸ்துதான் கிடைக்கும். ஆனால் உங்கள் பையன் மத்திய அமைச்சரானால் மாநில முதல்வருக்குரிய அந்தஸ்து கிடைக்கும். எது உங்களுக்கு வேண்டுமென ஒரு டீலிங்கை கேள்வியாக ஓ.பி.எஸ். முன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் இதில் நம்பிக்கையில்லாததால் ஓ.பி.எஸ். அந்த டீலிங்கை ஏற்க மறுத்திருக்கிறார்.

 

ஏற்கனவே, தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வரென்றும், ஒருவேளை அதிமுக தோற்றால், ஓ.பி.எஸ். எதிர்க்கட்சித் தலைவர் என்றும்தான் டீலிங் போட்டிருந்தனர். ஆனால், இப்போது அந்த டீலிங்குக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். “முன்பு என் மகனை மத்திய அமைச்சராக்குவதை எதிர்த்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது மட்டும் என் மகனை மத்திய அமைச்சராக்க எப்படிச் சம்மதிப்பார்” என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், கண்டிப்பாக சொன்னபடி நடக்குமென்று உறுதி சொன்னபிறகே தனது பதவி, மற்ற நிர்வாகிகளின் பதவிகளுக்கும் ஓ.பி.எஸ். ஓகே சொல்லியிருக்கிறார்.

 

இப்படி டீலிங் ஓகே ஆகுமென்பதை சசிகலா எதிர்பார்க்கவில்லை. ஓ.பி.எஸ்சை விமர்சித்த அன்புமணியை திட்டிய பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது, அன்புமணி மீதான மரியாதைக்காக இல்லை... புகழேந்தி, சசிகலாவின் ஆதரவாளராக மட்டுமல்லாது, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்குமிடையே இணைப்புப் பாலமாக இருந்தவர். எனவே புகழேந்தியை நீக்கி, சசிகலாவுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் "என்னை முதுகில் குத்த இனி இடமே இல்லை... அவ்வளவு பேர் குத்தியிருக்காங்க. ஓ.பி.எஸ்சை நான் பதவியிலிருந்து நீக்கல... அவரேதான் பதவி விலகினார்” என்றெல்லாம் புலம்பியிருக்கிறார் சசிகலா. ஆனால், ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது தினகரனும் டாக்டர் வெங்கடேசும்தான்.

 

சசிகலாவின் சொத்துக்கள், தினகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், இளவரசி ஆகியோரின் கைகளில்தான் உள்ளன. எனவே அவர்களை மீறி சசிகலாவால் வெளியே வர இயலாது. சசிகலா தனிப்பட்டு வந்தால் அவரை ஏற்க அதிமுகவில் எல்லோரும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சசிகலாவைச் சுற்றியிருக்கும் அனைவரையும் ஏற்க அதிமுகவினர் தயாராக இல்லை. சசிகலாவின் சொத்துக்களை எதையுமே வைத்திருக்காத திவாகரனை, சசிகலா தன்னோடு சேர்க்கவில்லை. ஆனால் அந்த திவாகரனோ அதிமுகவினர் மத்தியில் நல்ல டச்சில் இருக்கிறார். அவர் களத்துக்கு வந்தால் சசிகலாவின் முயற்சிகள் வெற்றிபெறும் என்று அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.

 

சசிகலாவுக்கு தற்போது வேறு வழியே இல்லை. தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உறவினர்களின் கூட்டைவிட்டு சசிகலா வெளியே வரத்தொடங்கியுள்ளார். தன்னை நம்பிவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஃபைனான்ஸ் உதவியும் செய்கிறார். சசிகலாவின் கை ஓங்கும்போது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். தானாக வழிக்குவருவார்கள்'' என்பது சசிகலா தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது

 

 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.