திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியஅவர், " நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே தேதி கொடுங்கள், கூட்டம் நடத்த வேண்டும் என்று அண்ணன் சேகர்பாபு என்னிடம் விலியுறுத்தினார். நான்தான் இப்பதான் தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சதால ஒரு இடைவெளி எடுக்க விரும்பினேன். ஆனால் சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்த அவர், கையில் அழைப்பிதழை கொடுத்து, செவ்வாய் கிழமை விழா வைத்துள்ளோம் வாருங்கள் என்று கூறினார். அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பு எப்போதும் நல்ல நிலையில் இருக்கும். தற்போது மக்கள் அனைவரும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். முன்னாடி எல்லாம் யாரையாவது பார்த்தால் எப்படி இருக்கீங்கன்னு கேட்போம். ஆனால் தற்போது தண்ணீர் குடித்தீர்களா, குளித்தீர்களா என்று கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான இந்த கேடுகெட்ட எடப்பாடி ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். இங்கு அதிக அளவில் பத்திரிக்கை நண்பர்கள் வந்துள்ளார்கள். நான் திருச்சியில் பேசியதை சிலர் திரித்து பரபரப்பாக்கினார்கள். திமுக நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை மட்டும்தான் நான் தெரிவித்தேன். மற்றப்படி கூட்டணிக்கு வேட்டு வைக்கவில்லை. தவறாக புரிந்து கொண்டு சிலர் சர்ச்சையை கிளப்புகிறார்கள்" என்றார்.