ADVERTISEMENT

அதிமுக கொடி யாருக்கு; மோதிக்கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்

12:09 PM May 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்பு படம்

ADVERTISEMENT

சேலத்தில் நேற்று 4 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் சார்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கியத் தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஓபிஎஸ் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டி இருந்தனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியின் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் திரண்ட நிர்வாகிகள், அங்கிருந்த அதிமுக கொடிகளை கட்டிக் கொண்டிருந்த தினேஷிடம், ‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நீங்கள் எப்படி அதிமுகவின் கொடியை கட்டலாம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இதற்கிடையில் அங்கிருந்த சிலர் கொடிகளைப் பிடுங்கி வீசினர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார். அதில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சாலைகளில் இருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டன.

எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுகவின் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் கொடிகள் கட்டி இருப்பதை கண்ட இபிஎஸ் அணியினர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். சாலைகளில் கட்டப்பட்டு இருந்த அதிமுக கொடிகளையும் அகற்றினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை ஓபிஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது இபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நுழைந்து அதிமுக கொடியை அங்கிருந்து அகற்றினர். பின்னர் இபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கூட்டம் முடிந்த நிலையில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிக் கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என ஓபிஎஸ் அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் சேலம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT