ADVERTISEMENT

காலண்டரில் சுருங்கிப்போன தலைவர் படங்கள்! -தனித்தனி வழியில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.!

05:19 PM Jan 17, 2020 | kirubahar@nakk…

‘இது பொங்கல் அரசியல்..’ என்று பொங்கிய அந்த மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகி. “ஒருங்கிணைப்பாளர்கள் எனச் சொன்னாலும் எண்ணத்திலோ, செயலிலோ இருவரும் ஒருங்கிணைந்தவர்களாக இல்லை.. அதாவது, அவர்கள் ஒன்றுசேரவில்லை.” என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., குறித்து குறைப்பட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவரை வேதனைப்படுத்திய விஷயம் இதுதான் -

ஆங்கில வருடப் பிறப்பு ஜனவரி 1-ஆம் தேதி என்றாலும், அவர்களின் படம் போட்டு அச்சிட்ட தினசரி காலண்டர்கள், தைப் பொங்கலன்றே பல இடங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் எனத் தன்னுடைய பெயர் போட்டு அச்சிட்ட காலண்டரில், தனது படத்தையும் எடப்பாடி பழனிசாமி படத்தையும் ஒரே அளவிலும், ஜெயலலிதா படத்தைப் பெரிதாகவும் போட்டு, தேனி மாவட்ட கட்சிக்காரர்களுக்குக் கொடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தனது ஆதரவாளர்கள் அச்சிட்ட காலண்டர்களிலும் இதே முறையைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி விஷயத்திலோ, இதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் அச்சிட்ட காலண்டரில் எடப்பாடி படம் மட்டுமே பிரதானமாக உள்ளது. ஓ.பி.எஸ். போட்டோ ஒரு ஓரமாகக்கூட இல்லை. அதில், கட்சியின் பெயரிலுள்ள அண்ணா சுத்தமாக மிஸ்ஸிங். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோதான்! எடப்பாடிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. ஏனென்றால், இந்தக் காலண்டரை கையில் வைத்தபடி பழனிசாமியே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்தக் காலண்டர் அரசியல் குறித்து அதிமுக சீனியர் ஒருவர், “சட்ட விதிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. அதனால்தான், காலண்டரிலும் அவர் ஜெ. விசுவாசத்தைக் காட்டுகிறார். எடப்பாடியை, ஜெயலலிதாவா முதலமைச்சர் ஆக்கினார்? இந்த உண்மை, எடப்பாடிக்கு மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. அதுதான் காலண்டரிலும் வெளிப்பட்டுள்ளது.” என்று யதார்த்தத்தைச் சொன்னார். அரசியலில் எது நடந்தாலும் அதற்கொரு காரணம் இருந்தே தீரும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT