கட்சியில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அந்த விவாதத்தில், கட்சியின் தொழில் நுட்ப பிரிவை மாற்றியமைக்கவும் முடிவு செய்து அதன்படி அதிமுகவின் ஐ.டி.விங்கை சில மண்டலமாக பிரித்திருக்கிறார்கள். சென்னை மண்டலத்துக்கு ஆஸ்பயர் சுவாமிநாதன், வேலூர்மண்டலத்துக்கு கோவை சத்யன், மதுரை மண்டலத்துக்கு ராஜ்சத்யன், கோவை மண்டலத்துக்கு சிங்கை ரவிச்சந்திரன் என நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை செயலாளராக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும், எடப்பாடியின் நாடார் விரோத போக்கிற்கு எதிராக நாடார் சமூகத்தினர் அண்மைக்காலமாக, போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், அரசியல் ரீதியாக எந்தெந்த வகைகளிலெல்லாம் நாடார் சமூகத்தினரை எடப்பாடி ஓரங்கட்டுகிறார் என்பதை நாடார் சமூகத்தினரிடம் பிரச்சாரம் செய்து வருவதுடன், நாடார், சாணார், கிராமணி, மூப்பர் ஆகிய பிரிவினரை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் பணியிலிலும் குதித்துள்ளார்.