Skip to main content

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; தம்பி பரபரப்பு வாக்குமூலம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

MP His younger brother has also been arrested in Mastan's case

 

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றபோது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர், மஸ்தானின் உறவினரான சித்தா டாக்டர் சுல்தான், அவரது நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

காவல்துறையின் விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஐந்து பேரும் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. அதில் கடந்த 22ஆம் தேதி மஸ்தான் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஊரப்பாக்கம் அருகே அவரது டிரைவரின் உதவியுடன் கொலை செய்துள்ளனர். இதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக அவரது டிரைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்யத் திட்டமிட்ட அவரது கார் டிரைவர், மூச்சுத் திணறலால் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

காரில் நசீர், மஸ்தானின் கைகளைப் பின்புறமாக இறுக்கிப் பிடித்துக்கொள்ள உடன் இருந்தவர்கள் மஸ்தானின் வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்துக் கொலை செய்துள்ளதும் பின்னர் தெரிய வந்தது. மஸ்தானின் உறவினர் இம்ரான் பாஷா குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “நான் மஸ்தானின் உறவினர் என்பதால் அவரிடம் நெருங்கிப் பழகி வந்தேன். அவ்வப்போது கடன் வாங்கி 15 லட்சம் வரை கடன் வாங்கி விட்டேன். அவரது மகனுக்குத் திருமணம் நடப்பதால் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டார். உறவினர்கள் முன்பு என்னை மஸ்தான் திட்டினார். இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டேன்.

 

மஸ்தான் மருத்துவர் என்பதால் அவரை ஆயுதங்களால் கொல்ல முடியாது. எனவே மூச்சுத் திணற வைத்துக் கொலை செய்தோம்” எனக் கூறியுள்ளார்.  குற்றவாளிகள் ஐந்து பேரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கௌசே ஆதாம்பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்தான் கொலை வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கௌசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் உரையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். 

 

அதில் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர் கௌசே ஆதாம்பாஷாவினை கைது செய்தனர். காவல்துறையினரிடம் ஆதாம்பாஷா வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 5 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால் நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாகவும், பூர்வீக சொத்துத் தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார். 

 

கைது செய்யப்பட்ட கௌசே ஆதம்பாஷா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்