நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (06-04-24) வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூடவே கூடாது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்கப்படும்” என்று கூறினார்.