ADVERTISEMENT

“காமராஜர் பெயரை வைத்து பிச்சை எடுக்கிறார்கள்” - காங்கிரசை கடுமையாக விமர்சித்த குஷ்பு

05:08 PM Mar 12, 2024 | mathi23

வேலூர் மாவட்டம், தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் சுமார் 27,000 சதுர அடி நிலப்பரப்பில் ஏ.சி.எஸ் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர். சி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்லும் பாஜக ஏன் கூட்டணிக்காக தேடுகிறார்கள் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதலளித்த குஷ்பு, “நாங்கதான் ஜெயிக்கப் போகிறோமே. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்துள்ளார்கள். உங்கள் கட்சியில் பிரசாதம் செய்வதற்கு யாரும் இல்லை. கமல்ஹாசன் போல ஒரு முகம் உங்களுக்கு பிரச்சாரம் செய்ய தேவை. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா? முதலமைச்சர் போனாலும் கூட்டம் வராது. கூட்டத்திற்காக கமல்ஹாசன் வேண்டுமா முதலமைச்சருக்கு. கதவு திறந்தே உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம்.

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்கள். அதற்குக் காரணம் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த 65 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை கடந்த 10 வருடத்தில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம். தமிழகத்தில் 1967க்கு பிறகு ஏன் காங்கிரஸ் சொந்த காலில் நிற்க முடியவில்லை. காமராஜர் பெயரை வைத்து காங்கிரஸ் பிச்சை எடுக்கிறார்கள். தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டுடன் சேர்ந்து காங்கிரஸ் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனியாக நின்று இருக்கலாமே?.

அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் யாருடைய ஆள். திராவிட முன்னேற்றக் கழகம் தானே. ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்துவிட்டதா. இப்போதானே கைதாகி உள்ளார். தொடர்புடையவர்களின் பெயரெல்லாம் இனிமேல் தானே வரும். வரட்டும் பிறகு பேசுவோம்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க.வினருக்கு பயம். பிரதமர் மோடி வரும்போது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. இந்தி தெரியாது போடா என்று சொல்லும் அளவுக்கு மோடி வருகிறார் அல்லவா. வந்துவிட்டு போகட்டுமே. உங்களுக்கு என்ன வந்தது. பயத்தில் தான் இது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் போய் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன்.

வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏ.சி.எஸ் என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புரட்சித்தலைவர் தொடங்கி, புரட்சித்தலைவி, கலைஞர், கமல்ஹாசன் என விஜய் வரை அனைவருக்கும் மக்கள் மத்தியில் அனைவருக்கும் செல்வாக்கு மற்றும் அன்பு இருந்தது.

உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் ஹீரோவான பிறகு தானே அரசியலுக்கு வந்தார். ஏன் முதலமைச்சரும் நடிகனாக வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார். அதற்குப் பிறகுதானே அரசியலுக்கு வந்தார்” என்று பேசினார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புதிதாக வந்துள்ளார், ஏன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். முயற்சி செய்து வரட்டும், 2026ஐ பற்றி 2026 இல் பேசுவோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT