Skip to main content

'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு! கட்சித்தாவலின் பரபரப்பு பின்னணி!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

khushbu

 

"மயிலுக்கு சோறு போடும் மோடி, மனிதர்களுக்கு சோறு போடுவாரா? மோடியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று அக்டோபர் 6-ஆம் தேதி வடசென்னை காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் குஷ்பு. அதற்கடுத்த ஆறாவது நாளில் (அக்டோபர் 12-ஆம் தேதி), அதே குஷ்பு, காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டதுடன், "மோடியே அனைத்து மக்களுக்கும் காவலர்; நாட்டை நல்வழியில் நடத்திச் செல்கிறார் பிரதமர்' என்று அதிரடி காட்டினார்.

 

khushbu

 

கட்சித்தாவல் என்பது குஷ்புக்கு புதிதல்ல. தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டபோது காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியுள்ளார். எனினும், 'பா.ஜ.க. தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கட்சித் தாவலுக்குப் பின்னணி' என்கின்றன டெல்லி தகவல்கள்.

 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மாற்றுக் கட்சியிலிருக்கும் பிரபலங்களை பா.ஜ.க.விற்குள் இழுக்கும் அசைன்மெண்ட்டில் முக்கியமானது, ஆபரேஷன் குஷ்பு. காங்கிரசில் குஷ்புவின் அதிருப்தியை ஏற்கனவே அறிந்திருந்த மத்திய அமைச்சர் அமீத்ஷா, குஷ்புவிடம் பேசுமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குஷ்புவையும் அவரது கணவர் சுந்தர்.சி.யையும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்தார் முருகன் (இதனை முதன்முதலாக அப்போதே பதிவு செய்திருக்கிறது நக்கீரன்).

 

khushbu

 

அந்தச் சந்திப்பில், ராஜ்யசபா எம்.பி., தேசிய அளவில் கட்சி பொறுப்பு ஆகிய நிபந்தனைகளை வைத்தார் குஷ்பு. அதற்கான உத்தரவாதத்தை முருகனால் தர முடியவில்லை. அமித்ஷாவுக்கு இதனை முருகன் பாஸ் செய்ய... "காங்கிரசில் அவருக்கான முக்கியத்துவம் இல்லை என்கிற நிலையில்தான், பா.ஜ.க.வின் அழைப்பை பயன்படுத்திக்க குஷ்பு நினைக்கிறார். அவரைத் தவிர அவருடன் யாரும் வரப்போவதில்லை. அப்படியிருக்கும் நிலையில், கட்சியில் சேருவதற்கு முன்பே நிபந்தனை போடுவது சரி அல்ல. பா.ஜ.கவில் இணையச் சொல்லுங்கள்; பிறகு பதவிகள் வரும். நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்'' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனை குஷ்புவின் கணவரிடம் தெரிவித்துள்ளார் முருகன்.

 

khushbu

 

இதனையறிந்த குஷ்பு, "எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி தான். நம்முடைய பாப்புலாரிட்டியை பயன்படுத்திக்க குறியாக இருக்கிறார்கள். ஆனால், நம் எதிர்பார்ப்புகளை மட்டும் ஏற்பதில்லை. பா.ஜ.க.விலிருந்து இனி அழைப்பு வந்தால் பேசவேண்டாம்" எனக் கோபமும் வெறுப்புமாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு. அந்த கோபம்தான் 6-ஆம் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிராக அவர் கர்ஜித்தவை என்கிறார் நம்மிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

 

khushbu

 

குஷ்புவின் கட்சித்தாவல் குறித்து மேலும் விசாரித்தபோது, "குஷ்பு வைத்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்த நிலையில், அவர் அமைதியாக இருந்திருக்க லாம். ஆனால், காங்கிரஸ் கூட்டத்தில் பா.ஜ.க.வை அட்டாக் செய்த குஷ்புவின் பேச்சை முழுமையாக டேப் செய்த மத்திய உளவுத்துறையினர் அதனை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, பிரதமர் அலுவலகம் டென்சனாகியிருக்கிறது. அமித்ஷாவும் கோபமாகியிருக்கிறார். மோடிக்கு எதிராக குஷ்புவை பயன்படுத்தும் வகையில், அவரது அதிருப்தியை சரி செய்து, காங்கிரசில் முக்கியத்துவம் தர ராகுல்காந்தி யோசிக்கலாம். அது காங்கிரசுக்கு ப்ளஸ் பாயிண்டாக அமையலாம்'' என யோசித்தது பா.ஜ.க. தலைமை.

 

khushbu


காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அக்கட்சிப் பிரபலங்களின் வருமான வழிகளையும் முதலீடுகளையும் சேகரித்து வைத்திருக்கிறது மத்திய வருமானவரித்துறை. அந்த வகையில், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி.யின் வெளிநாட்டு முதலீடுகளும் பா.ஜ.க.விடம் சிக்கியிருக்கிறது. அதனை வைத்து சுந்தர்.சி.யின் வழியாக மிரட்டப்பட்டார் குஷ்பு. சினிமாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, மிகவும் துணிச்சலானவர் என பெயரெடுத்துள்ள குஷ்புவும் அவரது கணவரும் பா.ஜ.க.வின் இத்தகைய மிரட்டலை எதிர்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் பா.ஜ.க.வில் இணைய நேரிட்டுள்ளது'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

 

amitshah

 

டெல்லியிலிருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு அசத்தலான வரவேற்பை தந்தனர் தமிழக பா.ஜ.க.வினர். இதனையடுத்து கமலாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த குஷ்பு, " 'எதிர்க்கட்சியான காங்கிரசில் இருந்ததால் பா.ஜ.க.வையும் மோடியையும் விமர்சிக்க நேர்ந்தது. என் கணவர் வலியுறுத்தியதால் தான் பா.ஜ.க.வில் சேர்ந்தேன்' என காங்கிரஸ் தலைவர் (கே.எஸ்.அழகிரி) சொல்வது அபத்தம். கணவருக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. காங்கிரஸில் இருக்கும்போது நான் நடிகையாகத் தெரிய வில்லையா? சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்'' என்றெல்லாம் போட்டுத் தாக்கினார் குஷ்பு. அதேநேரத்தில் "கட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை என்றும், பா.ஜ.க.வில் இருந்தாலும் பெரியார் கொள்கையுடன் இருப்பேன்'' என்றும் தெரிவித்தார்.

 

khushbu

 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது,’ "அரசியலுக்கும் தனது கணவருக்கும் (சுந்தர் சி) சம்மந்தம் இல்லையெனில் பா.ஜ.க.வில் சேர டெல்லிக்குச் செல்லும் போது சுந்தர்சி.யை அழைத்துச் சென்றது ஏன்? குஷ்பு நடிகை என்பதை தவறாக நாங்கள் பார்க்கவில்லை. நடிகை என்பது தவறான சொல் கிடையாது. அது பெருமையானது. அவர் நடிகை என்பதால்தான் காங்கிரஸில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டாரே தவிர சுதந்திரப் போராட்ட தியாகி என்பதாலோ, பொருளாதார நிபுணர் என்பதாலோ அல்ல. இப்போ, பா.ஜ.க. அவரை சேர்த்துக்கொண்டது கூட நடிகை என்பதால்தான். காங்கிரசில் இருந்துகொண்டே பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தது துரோகமில்லையா?''’என்கிறார் அழகிரி.

 

Ad

 

இதற்கிடையே குஷ்புவின் கட்சித் தாவல், காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களில் சிலரிடம் பேசியபோது, "குஷ்புவின் பாப்புலாரிட்டி காங்கிரஸுக்குத் தேவை. அதனால் அவரை பாதுகாக்க கட்சித் தலைமை தவறிவிட்டது. பா.ஜ.க.வில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிருப்தியாக இருப்பதையும் அவரை தி.மு.க வளைக்க முயற்சிப்பதையும் அறிந்த பா.ஜ.க முருகன், உடனே நெல்லைக்கு கிளம்பிபோய் அவரை சமாதானப்படுத்தினார். அந்த அணுகுமுறை குஷ்பு விஷயத்தில் காங்கிரசில் இல்லைங்கிறது துரதிர்ஷ்டம். குஷ்புவைத் தொடர்ந்து, தலைமையால் புறக்கணிக்கப்படும் முக்கிய நிர்வாகிகள் பலரையும் வளைக்க பா.ஜ.க. ஸ்கெட்ச் போட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் ஆட்டம் காங்கிரசை மிரள வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை''’ என்கின்றனர்.

 

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.