காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தாமதிக்கிறது மத்திய அரசு. கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பா.ஜ.க. தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘காவிரி தண்ணீர் கிடைப்பதற்காக தமிழர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்’ என கூறியது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழர்களுக்கு குடிப்பதற்கும், விவசாயத்திற்காகவும் தண்ணீர் வேண்டுமென்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தேவையைப் பூர்த்திசெய்ய நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால், காவிரிநீர்தான் வேண்டுமென்றால் தமிழர்கள் ஓலமிடுவதையும், அழுவதையும் தவிர வேறுவழியில்லை’ என பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, தமிழகத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் போராட்டம் உருவாகிவரும் சூழலில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்து மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.