Skip to main content

மோடி நண்பர் vs ராகுல் நண்பர்... - இது CBI மோதல்!

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

ன்னாட்சி அமைப்பு எனப்படும் சி.பி.ஐ.யின் இயக்குநராக இருக்கும் அலோக்வர்மா, பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர். அதேபோல, அத்துறையின் சிறப்பு இயக்குநராக இருக்கும் ராகேஸ்அஸ்தானா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர். இந்த இரண்டு உயரதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளால் பரபரத்துக் கிடக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

asthana-CBIதொழிலதிபர் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. ஊழல் வழக்கு என முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார் ராகேஸ்அஸ்தானா. மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சி.வி.சி., இந்த ஊழல் வழக்குகளின் புலனாய்வு குறித்து பிரதமர் அலுவலகத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தது. உடனே, அவ்வழக்குகளின் தற்போதைய நிலை பற்றிய அறிக்கையை கேட்டு ராகேஸ் அஸ்தானாவிற்கு கடிதம் எழுதியது பிரதமர் அலுவலகம். அதன்படி, பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பிய ராகேஸ்அஸ்தானா, அதே பாணியில் சி.வி.சி.க்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில், இவ்வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து நடத்தமுடியாத அளவுக்கு பல்வேறு தடைகளை அலோக்வர்மா ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அஸ்தானா கேட்கும் தகவல்களை தரவேண்டும் என்றும், அவர் விசாரித்துவரும் 6 வழக்குகளின் விவரங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அலோக்வர்மாவுக்கு உத்தரவிடும் பாணியில் கடிதம் எழுதினர் சி.வி.சி. அதிகாரிகள். பிரதமர் அலுவலகம் அதிர்ச்சியடைந்தது.

agarwal-CBIஇந்த நிலையில், சி.வி.சி. அதிகாரிகள் கேட்டிருந்த தகவல்களை அனுப்பி வைத்ததுடன், ’’""அஸ்தானா விசாரிக்கும் வழக்குகள் எதிலும் நான் தலையிடுவதில்லை. விசாரணைக்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அஸ்தானா மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவைகளை மறைக்கவே என்மீது பொய்யான தகவல்களையும் தவறான புகார்களையும் அஸ்தானா தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்''‘என சி.வி.சி.க்கு பதில் அளித்திருக்கிறார் சி.பி.ஐ. இயக்குநரான அலோக்வர்மா.

 

இதுகுறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநராக இருந்த ராகேஸ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமிக்க வேண்டிய சூழல் கடந்தவருடம் அக்டோபரில் மோடி அரசுக்கு ஏற்பட்டது. சிறப்பு இயக்குநராக அஸ்தானா நியமிக்கப்படுவதை விரும்பாத அலோக்வர்மா, எதிர்ப்பு தெரிவித்தார். இது ஏற்கப்படாததால் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார் அஸ்தானா. அதேசமயம், அஸ்தானாவின் நியமனத்தை எதிர்த்து காமன் காஸ் என்கிற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. இதன் பின்னணியில் அலோக்வர்மா இருப்பதாக சந்தேகப்பட்டார் அஸ்தானா.

"அவர் மீது ஆறு ஊழல் புகார்கள் இருக்கிறது. அதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் கண்காணிக்கப்பட்டு வருவதால் சி.பி.ஐ.க்கு பணியாளர்களை நியமிப்பதில் அவரோடு கலந்தாலோசிக்கக் கூடாது' என ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதினார் அலோக்வர்மா. குறிப்பாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் 5 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில், நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேஸாரா சகோதரர்களின் டைரியில் அஸ்தானா பெயர் இருக்கிறது என்பதையும், சந்தேஸாரா சகோதரர்களுக்கு எதிரான வருமானவரி விசாரணையில் அஸ்தானா குறுக்கீடு செய்ததாகவும், அதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் அலோக்வர்மா. இதனால் அவர்மீது மேலும் கோபமடைந்தார் அஸ்தானா.

இதனை மறுத்து சி.வி.சி.க்கு கடிதம் எழுதிய அஸ்தானா, "மத்திய ரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் இருந்தபோது நடந்த ஊழலுக்காக லாலுவின் மனைவி ரஃப்ரி மற்றும் மகன் தேஜஸ்வி பெயர்களில் நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இதுதொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டபோது அதில் தலையிட்டு தடுக்க நினைத்தார் அலோக்வர்மா. அதனை நான் எதிர்த்ததால் தற்போது என்னை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன விவகாரத்தில் நுழைக்கிறார். அவ்வழக்கின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை' என தன் மீதான குற்றச்சாட்டுகளை கடிதத்தில் மறுத்துள்ளார் அஸ்தானா. இந்தக் கடித யுத்தங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அப்போதே பெரும்தலைவலியைக் கொடுத்தது''‘என பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"சி.பி.ஐ.யில் நடக்கும் அதிகார மோதல்களுக்குள் திடீரென நுழைந்துள்ள சுப்பிரமணியன்சாமி, "அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க நிதி அமைச்சகம் தடுக்கிறது. விரைவில் இதுகுறித்த ஆவணங்களை வெளியிடுவேன்'’என பகீர் கிளப்பியிருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கும் சுப்பிரமணியன்சாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஜெட்லியை எதிர்க்கவேண்டியே இந்த விவகாரத்தில் அவரை இழுத்துவிட்டிருக்கிறார் சாமி'' என்கின்றனர்.

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது இரண்டு உயரதிகாரிகளிடையிலான மோதல்.
 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.