இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை கூடவுள்ள நிலையில், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுத்திடலில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திராவிட இயக்க கொள்கைப் பயணத்தை 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த ‘டிரோன் ஷோ’(Drone Show) நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என தலைவர்களின் உருவங்கள், தலைவர்கள் கட்டிக்காத்த தமிழ்நாட்டின் வரைபடம், உதயசூரியன் சின்னம், திமுக இளைஞரணியின் இலட்சினை போன்றவற்றை வானில் ஜொலிக்கச் செய்த ‘டிரோன் ஷோ’ நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.