நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள், மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு வார்த்தை நடத்தியது. சென்னை அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பி.சம்பத், பெ.சண்முகம், க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகிய 4 பேர் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், “தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. எங்களது முடிவை கூட்டணி தலைமையிடம் கூறியுள்ளோம். முதல்வர் ஸ்பெயினில் இருந்து திரும்பி வந்தவுடன் தொகுதி குறித்த உடன்பாடு ஏற்படும் என்று நம்பிக்கையுள்ளது” என்றனர்.