Skip to main content

தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
DMK - Negotiation between Marxist

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (25.02.2024) நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடந்த 4 ஆம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. கூட்டணியில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்